நான்கு பிள்ளைகளை நீங்கள் பெற்று அதில் ஒரு குழந்தை காணாமல் போனால் மிச்சமிருக்கும் வாழ்வை நீங்கள் எவ்விதம் எதிர்கொள்வீர்கள்? சமீபத்தில் ஒரு கல்லூரிப் பையன் சென்னை மெரீனா கடற்கரைக்கு குளிக்கச் சென்றான். கடலலைகள் அவனை இழுத்துச் சென்று விட்டது. அவனது உடல் கிடைக்கவில்லை அவனைப் பெற்றவர்கள் இன்னமும் தன் மகன் எங்கோ உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.அவர்கள் போகாத கோவில் இல்லை. பார்க்காத மந்திரவாதிகள் இல்லை. அந்த நம்பிக்கையை காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில மந்திரவாதிகள். சமீபத்தில் அந்த பையனின் உறவினரைப் பார்த்த போது அடுத்த அமாவாசைக்குப் பிறகு பையன் திரும்பி வந்து விடுவான் என்று குறி சொல்லப்பட்டிருக்கிறதாம். இம்மாதிரியான நம்பிக்கையில் பல அமாவாசைகளைக் கடத்தி விட்டார்கள் அவர்கள். காணாமல் போவது துயரமானது. நம்முடன் வசிக்கும் ஜீவன் ஒன்று திடீரென இல்லாமல் போவதென்பதும் அவர்களற்ற ஒரு வெளியில் காணாமல் போனவர்களின் நினைவைச் சுமந்து வாழ்வது துன்பமானது. நீண்ட கால மன நெருக்கடியை உருவாக்கி அதனூடே மனிதர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வாழ வைக்கிறது. நீண்டகால யுத்த சூன்யப் பகுதிக்குள் காணாமல் போதல் என்பது சகஜமான ஒன்றாக இருக்கிறது. காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொரு இராணுவத் தேடுதல் வேட்டையில் போதும் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார்கள். அப்படி கொண்டு செல்லப்படுகிறவர்கள் குறித்த தகவல்கள் பின் எப்போதும் பெற்றோர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் காணாமல் போன தங்களின் பிள்ளைகளைத் தேடி ஆயுள் முழுக்க அலைக்கிறார்கள். நீதி பரிபாலனத்தின் கதவுகளில் காணாமல் போன தங்களின் பிள்ளைகளைத் தேடித் தேடி நீதி கிடைக்காமல் சோர்ந்து போய் விடுகிறார்கள். கடைசி வரை அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. கேரளாவில் எழுபதுகளின் காணாமல் போன தன் மகனை தான் சாகும் வரைத் தேடினார் ஈச்சரவாரியார். வர்க்க, சாதி, இன, மத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அரசியல் கிளர்ச்சிகளும் அதை அடக்க நினைக்கும் அரசுகளும் தங்களின் சொந்தக் குடிகளையே கடத்திச் செல்கின்றன. உங்கள் அறிவுக்குத் தெரிந்து உலகின் பதட்டமான பகுதி என்று உங்களுக்கு எந்த இடம் தெரியுமோ அது எந்த இடமாக இருந்தாலும் அங்கே ஏதோ ஒரு இளைஞன் காணாமல் போய்க் கொண்டிருக்கிறான். இந்தியாவின் நக்சல்பாரிகளின் எழுச்சிக் காலமான எழுபதுகளில் கேரளத்திலும் தமிழகத்திலும் முற்போக்கு இளைஞர்கள் போலீசால் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றவர்கள் திரும்பி வராமல் போனதுண்டு. ஈரான், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கிலும், ஆப்கான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இதே விதமான கடத்தல் நடவடிக்கையைச் செய்கிறது அந்தந்த அரசுகள். ஆனால் நாம் நன்கறிந்த இலங்கையில் காணாமல் போகிறவர்களின் எண்ணிகை அதிகம். உலகில் வேறெங்கிலும் இவளவு அதிகமாக இளைஞர்கள் காணாமல் போனார்களா? என்று தெரியவில்லை.