கடந்த கால நினைவுகளை அசைபோடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். நினைவுகள் முக்கியமானவை. சில நினைவுகள் நமக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும், சில வலிகளையும் நினைவுப்படுத்தும். வாழ்ந்து முடிந்த சில கணங்களை மீள் உருவாக்கம் செய்தும் தரும் சில மென் நினைவுகள். மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிர் மீண்டு வரும் நிலையில் உள்ள அலெக்ஸாண்டர் எனும் கவிஞரின் நினைவுகளின் பயணமே ”எடிர்னடி அண்ட் எ டே” கடைசிக் காலத்தை மருத்துவமனையில் கழிக்க நேரிடும் அவலத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டு நாளை எனும் நாள் தன் வாழ்வில் இருக்கிறதோ இல்லையோ எனத் தெரியாத சூழ்நிலையில் இது நாள் வரை மிகப் பிரியமாக வளர்த்து வந்த தன் நாயை தகுந்த ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்து புறப்படுகிறார் அலெக்ஸ். தன் ஒரே மகளின் வீட்டுக்குச் செல்லும் வழியில் நாடோடிச் சிறுவன் ஒருவனைப் பார்க்கிறார். அவனையொத்த வயதுடைய சிறுவர்கள் ட்ராஃபிக்கில் சிக்னலுக்காக நிற்கும் வண்டிகளை வழிமறித்து அவசர அவசரமாக அதை துடைத்து சுத்தம் செய்து அதில் கிடைக்கும் காசில் தங்கள் வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொள்பவர்கள். இதை போலீஸ்காரர்காரர்கள் பார்த்துவிட்டால் அவர்கள் கதி அவ்வளவுதான். வேனில் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். போதாதற்கு பிள்ளை பிடிப்பவர்களும் இது போன்ற சிறுவர்களை கடத்திச் சென்று விற்றுவிடுவார்கள். இந்நிலையில் தன் காரை அவசரமாக துடைத்த அந்த எட்டு வயது அல்பேனிய அகதியான அச்சிறுவனைப் பார்த்து கவிஞரின் மனம் இளகுகிறது. அதற்குள் போலீஸ்காரர்கள் சிறுவர்களை துரத்த எல்லோரும் தலை தெறிக்க ஓடித் தப்புகின்றனர். இவன் மிகச் சிறியவனாக இருக்கிறான். அலெக்ஸ் அவனை தன் காரில் ஏற்றி சிறிது தூரம் சென்று அவன் சொன்ன இடத்தில் இறக்கி விடுகிறார். நன்றி சொல்லிவிட்டு அவன் ஓடிவிடுகிறான். சிரித்துக் கொண்டே தன் மகள் வீட்டிற்குச் செல்கிறார். மகளைப் பார்த்ததும் அலெக்சுக்கு மனைவியின் நினைவு வருகிறது. மகளிடம் தனக்கு உடம்பு சுகமில்லை என்பதைச் சொல்வதற்குள் நாயுடன் வந்திருக்கும் அப்பா அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லப்போகிறார் என்பதை அவதானித்து தன் கணவருக்கு நாய் வளர்ப்ப்து பிடிக்காது என்கிறாள். மேலும் கடற்கரையில் அவர் வசித்துக் கொண்டிருக்கும் வீட்டை அவள் கணவர் விற்றுவிட்டார் என்ற தகவலையும் சொல்கிறாள். தன்னிடம் கேட்காமல் இவர்கள் இப்படிச் செய்துவிட்டார்களே என மனம் வருத்தப்பட்டு ஆனால் ஏதும் சொல்ல இயலாதவராய் அங்கிருந்து கிளம்புகிறார். தன் தாயின் கடிதங்கள் வீட்டை ஒழிக்கும் போது கிடைத்தது என சில கற்றைத் தாள்களை அவரிடம் தருகிறாள் அவள். தன் மகள் தன்னுடன் ஒட்டுதல் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் வேறு யாருமல்ல தான் தான் என்பதை நன்கு அறிவார் அவர். மனைவி அன்னாவையும் சின்னஞ்சிறு குழந்தையான மகளையும் தன் வேலைகளின் பொருட்டு அவர் அவர்களுடன் அதிக நேரம் செலவிடாமல் எப்போதும் கதை கவிதை என தன்னுலகில் மூழ்கியிருந்திருக்கிறார். கடந்த காலங்களில் அவர் செய்த ஒரே விஷயம் எழுதுவது. உலகம் அவரைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தது அவ்வளவே. தன்னின் மூழ்கித் திளைத்து வார்த்தைகளைத் தேடியும் அதிலேயே தோய்ந்து வாழ்ந்திருந்த அவருக்கு சுற்றமும் நட்பும் மனைவியும் குழந்தையும் தேவையிருக்கவில்லை. ஆனால் அவர்கள் இவரைச் சூழ்ந்திருந்தார்கள், முசுடாக இருந்தாலும் அவரைக் கொண்டாடினார்கள். அவருக்கான தனிமையின் சூழலை அவரே அறியா வண்ணம் அமைத்துத் தந்தார்கள். அதிலும் மனைவி அன்னா அலெக்ஸின் மீது பெருங் காதல் உடையவள். அழகான பெண் குழந்தையைக் கொஞ்சாத கணவனை கடிந்து கொள்ளத் தெரியாதவள். அத்தகைய அன்பு மனைவியைப் பற்றிய நினைவுக் குறிப்பு யாதொன்றும் இல்லாமல் போனதை நினைத்து அவருக்கு மனச் சங்கடமாக இருந்தது. ஒரே ஒரு நாள் தன் மனைவி குழந்தை மாமியாருடன் மலைத் தீவொன்றிற்கு உல்லாசப் பயணம் சென்றது மட்டுமே அவர் நினைவுத் திரையில் நீங்காமல் தங்கிய ஒரே தடயம். அன்றைய நாளில் அவர் மனைவி, கைக்குழந்தை, உறவினர்கள் நண்பர்கள் என ஒரு சிறிய பட்டாளத்துடன் கப்பலில் கிளம்பி தீவிற்குச் சென்றார்கள். அங்கேயே சமைத்து சாப்பிட்ட பின் அலெக்சுக்கு அச்சூழல் கவிதை எழுத ஏதுவாய் இருக்கவே தனிமையை விரும்பி கூட்டத்திலிருந்து நழுவிச் செல்கிறார். மிக அழகான அந்தக் கடற்கரையும், பாறையும், மழை வருவதற்கான அறிகுறியுடனான வானமும் அவர் கவிம்னதை இளக்கி இயற்கையில் கரைந்து செல்ல வைக்கிறது. பெரும் மழை பொழியவே அனைவரும் கூச்சலுடன் ஒதுங்க ஓடிச் செல்கிறார்கள். அப்போதுதான் அவர் நினைவுலகிற்கு வந்து தன் மீது மழை நனைத்திருப்பதை அறிந்து அன்னா எங்கே எனத் தேடி ஓடிகிறார். அவர் தனக்காக வருவார் என்பதை அறிந்து மழைக்கு ஒதுங்காமல் அன்னா நனைந்தபடி இருக்கிறாள். மனைவியை ஓடி வந்த அள்ளி அணைத்து அவளின் அன்பில் நெகிழ்கிறார் அலெக்ஸ்.
அருமையான விமர்சனம். கவிதை போல உள்ளது. தடாகத்திற்கு வாழ்த்துக்கள்
it is really nice. keep the good work going.