கருணாவின் கர்ணன்
அதிகாரங்கள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள, தனக்கு கீழாக அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொள்ள, படைக்கப்பட்ட நியாயங்களும் பற்பல விதிமுறைகளும் காலந்தோறும் உருவாக்கப்படுவதை மறுவாசிப்பின் வழியே கேள்வி கேட்கிறது கே.எஸ். கருணாபிரசாத்தின் ”கர்ணன்” எனும் ஓரங்க நாடகம்.
கர்ணன் வளர்ப்பால் இழிகுலத்தில் பிறந்தவனுக்கு ஒப்பாகவே மகாபாரதத்தில் நடத்தப்படுகிறான். பிறந்த குழந்தை வெளியுலக தட்பவெப்பத்தினை ஏற்றுக் கொள்ளத் திணறி வீறிட்டு அழும். தாயின் அணைப்பில் அழுகை அடங்கும். சில நாட்களேனும் தாயின் கதகதப்பு குழந்தைக்குத் தேவைப்படும். தொப்புள் கொடியறுந்த கணமே பேழையில்வைத்து நீருக்குள் வீசப்பட்ட குழந்தை கர்ணன் தேரோட்டியின் மகனாக வளர்ந்தான். பிறந்தவுடன் வீசிய தாய் பிள்ளைப்பாசத்தோடு அவன் உயிரையே ஏனைய தன் குழந்தைகளின் உயிர்காக்க யாசித்தாள் - என்றுமே பாண்டவர்கள் பஞ்சபாண்டவர்கள் தான். பாண்டவார் ஐவரின் பிறப்பு சூட்சமம் அறிந்த குந்தி கர்ணனைத் தன் மகனென பகிரங்கப்படுத்தத் தயங்குவதும் அங்கீகர்க்க மறுப்பதும் தாய்மை கூட சமூகத்தால் கட்டுப் படுத்தப்பட்டதை உணர்த்துகிறது. இனி நாடகப்பிரதிக்குள்…….
தனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பாpசோதிக்க நினைத்து பெற்ற மகன் கர்ணனை செய்வதறியாது நீரில் விடுகிறாள் குந்தி. கலிகாலமாக இருந்தால் வயிற்றிலிருக்கும் பொழுதே ஏதேனும் செய்திருப்பாள். மணமாகாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் இச்சமூகத்திற்கு பயந்து தாயே பெற்ற குழந்தையை மறைப்பதைப் பேசும் கர்ணன் அத்தருணத்தில் முதல் மரணம் நிகழ்ந்ததாகக் கூறுமிடத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்கிறது.
அசுத்தங்களைத் தாங்கிய நீர்போல நானும் பல அசுத்தங்களைத் தாங்கப் போகிறேன் என்ற முன் அனுமானத்தில் ஆற்றில் விடப்பட்டதாகக் கர்ணன் கூறுமிடத்து உவமை நாடகப் போக்கை உய்த்துணர வைக்கிறது.
அர்ஜீனனுக்கு எதிரான சண்டைக்குத் தயாரான கணத்தில் குலம், பிறப்பு என்பன வீரத்திற்கு நிகராக நிறுத்தப் படுவதைக் கண்டு வெதும்புகிறது.
எந்த சர்வாதிகாரத்திற்கும் எதிராக வெகுண்டெழுந்து கேள்வி கேட்பவனை, உடனே சர்வாதிகாரச் சூழல் அவன் பிறப்பு, நிறம், வரலாறு என்று அவன் பின்னணியைக் கேள்விக்குட்படுத்தி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்ற வசனத்தில் உண்மையின் வேரைத் தீவிரமாகத் தேடுகிறது. அர்ஜீனனுக்கு எதிராக குலம் முன்னிறுத்தப்பட்ட கணத்தில் தன் இரண்டாவது மரணம் நிகழ்த்தப்பட்டதாக கர்ணன் கூறுகிறான்.
|