செராமிக் பெயிண்டரான தந்தையின் கண் பார்வை மங்கிவிட்ட நிலையில் குடும்பப் பொறுப்பு பதினேழு வயது க்ரீட்டின் (ஸ்கார்லெட் ஜொஹான்சன்) மேல் விழுகிறது. க்ரீட் மென்மையும் அமைதியும் சேர்ந்த அழகி. தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவுடையவள். திடீரென்று வாழ்க்கைச் சூழல் தன்னை கடைநிலைக்குத் தள்ளிய போதும் புன்சிரிப்புடனும் பொறுமையுடனும் அதை ஏற்றுக் கொண்டவள். புகழ் பெற்ற டச் ஓவியன் ஜோஹ்னஸ் வெர்மியரின் (காலின் ஃபிர்த்) வீட்டினரோடு தங்கி சமையல் மற்றும் இதர வேலைகள் செய்யும் பணிப்பெண்ணாகச் சேருகிறாள். புது சூழலில் மெளனத்தையே தனக்குரிய மொழியாக்கிக் கொள்கிறாள் க்ரீட். தலைமை வேலைக்காரி ஏவும் வேலைகளை எவ்வித முணுமுணுப்பின்றி சுறுசுறுப்புடன் செய்கிறாள். வெகு சீக்கிரம் அவ்வீட்டின் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்கிறாள். வெர்மியரின் ஓவியக் கூடத்தை சுத்தப்படுத்தும் போது அவ்விடத்தால் பெரிதும் ஈர்க்கப்படுகிறாள் க்ரீட். மற்ற வேலைகளைவிட அந்த அறையை சுத்தப்படுத்தும் போது மேலதிக கவனத்துடன் செய்கிறாள். வண்ணங்களில் வசமிழக்கும் பெண்ணாக அவள் இருக்கிறாள். ஓவியக் கூடத்தில் இருக்கும் ஓவியங்களை ரசிக்கிறாள். வீட்டிலிருந்து கிளம்பும் போது தந்தை பரிசளித்த ஓவியத்தை தினமும் உறங்கப் போகும் முன் பார்த்துவிட்டுத் தான் தூங்குவாள். தன்னுடைய ரசனையும் ஈடுபாட்டையும் தனக்குள்ளேயே பொத்தி வைத்துப் பாதுகாக்கிறாள் க்ரீட். ஓவியக் கூடத்தில் க்ரீட் ஜன்னல் அழுக்குகளை ஈரத் துணியால் துடைத்துக் கொண்டிருக்கையில் வெர்மியர் அங்கு வருகிறான். அவனோ கலைரசிகன், மிகச் சிறந்த ஓவியன், அவளோ ஓவியமே உயிர் பெற்று வந்தது போன்ற பேரழகி. முதல் பார்வையிலேயே வீழ்கிறான். ‘நான் உன்னை வரைவேன். உன்னை முதன்முதலில் பார்த்த அதே கோலத்தில், பணிப்பெண்ணாக இல்லை பெண்ணே, நீயாக, நீ மட்டுமாக’ என மனதுள் நினைக்கிறான் வெர்மியர். அந்த இளமைப் பேரழகைக் கண்ணால் கண்டதும் அவன் கைகள் பரபரத்தன, அக்கணத்தை உறைய வைக்க அவளை உடனடியாக வரைந்து பார்க்க ஆசைப்பட்டு ‘அப்படியே நில், அசையாதே’ என்று சொல்லி அவளை முடிந்த வரையில் தன் மனக் கண்ணில் நிறைத்துக் கொள்கிறான் வெர்மியர். தன்னிடம் அதிக நேரம் க்ரீட்டை நிற்க வைத்துக் கொள்ள வீட்டு வேலை நேரம் போக மீதி நேரத்தில் தனக்கு உதவியாளராக இருக்கும்படி சொல்கிறான் வெர்மியர். வண்ணச் சேர்க்கையை மிகச் சிறப்பாக செய்யும் திறன் கொண்ட க்ரீட் சந்தோஷத்துடன் சம்மதிக்கிறாள். அதன்பின் சிறுகச் சிறுக அவர்களுக்குள் மன நெருக்கம் ஏற்படுகின்றது. பொறாமை பிடித்த தன் மனைவி காத்ரீனாவின் கண்களுக்குத் தப்பி வெர்மியர் க்ரீட்டிற்கு ஓவியத்தில் நுட்பமான வண்ணக் கலவைகளைக் கற்றுத் தருகிறான். அவர்கள் கரங்கள் அருகருகே இருந்தன, அவர்கள் இதயம் அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும் சத்தம் இருவருக்கும் நன்றாக கேட்கவே செய்தது, ஆனாலும் கட்டுப்பாட்டை இழக்காமல் உள்ளுக்குள் வரைந்த ஓவியமாய் அவர்களின் ப்ரியம் வளர்ந்து கொண்டிருந்தது. வெர்மியரின் மாமியாருக்கு இவர்களின் விதயம் சந்தேகமாக இருந்தாலும், தன் மருமகன் க்ரீட்டினால் பரவசப்படுகிறான், அதனால் அவன் ஓவியம் மேலும் அழகியலுடன் விளங்கக் கூடும் என்று நினைக்கிறாள். இதற்கிடையில் வெர்மியர் குடும்பம் வழக்கமாக இறைச்சி வாங்கும் கடைக்காரனின் மகன் பீட்ட்ர் (சிலியன் மர்பி) க்ரீட்டின் மீது காதல் வசப்படுகிறான். முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத க்ரீட் அவனை தவிர்க்கவும் முடியாமல் காதலிக்கவும் இயலாமல் சங்கடப்படுகிறாள். அவள் மனம்தான் ஓவியனின் மீது காரணங்களும் நிபந்தனைகளுமின்றி வீழ்ந்துவிட்டதே. அவளுக்கே இனம் தெரியாத உணர்வொன்று இரவு பகலாக அவளைக் கொன்று தின்று கொண்டிருப்பதை தானே மெளன சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வரண்டு போன இதயத்தின் வர்ண மழை வெர்மியராக இருந்த போதும் சொல்லப்படாத வார்த்தைகளின் துணையுடன் தன் காதலை ஒளித்து வைக்க கற்றுக் கொள்கிறாள். வெர்மியரின் முன் நிற்கும் சமயங்களின் காட்டிக் கொடுத்து விடும்படியான கண்களின் பார்வையை தாழ்த்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வாள் க்ரீட். அவனின் நிலையும் அதுவே என்று அவளறிவாள். ஆனாலும் அவன் ஆண், ஓவியன், தான் சாதாரண பெண் என தன்னிலையை நன்குணர்ந்து பீட்டரிடம் இயல்பாக பழக ஆரம்பிக்கிறாள். வெர்மியரின் ஓவியங்களை வாங்கியும் சந்தைப்படுத்தியும் உதவிக் கொண்டிருக்கும் குடும்ப நண்பன் வான் ரிஜூவன் (டாம் வில்கின்சன்) க்ரீட்டை பார்த்த நொடியில் மோக வசப்படுகிறான். அவளை தன் வீட்டு வேலைக்கு அனுப்பும்படி வெர்மியரிடம் கேட்கிறான். வெர்மியர் மறுக்கவே அவளை ஓவியமாக தீட்டியாவது தருமாறு பணிக்கிறான். வானிடமிருந்து க்ரீட்டை காப்பாற்றிய மாதிரியும் தன் மனதிற்கு உகந்தவளை வரைந்து பார்ப்பதிலும் என இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இதற்கு சம்மதிக்கிறான் வெர்மியர். ஒவியத்தை தன் கூடத்தில் ரகசியமாக ஆரம்பிக்கிறான் வெர்மியர். இதற்கிடையில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்த க்ரீட்டிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறான் வான். இதை மாடியிலிருந்து பார்த்த காத்ரீனா குரல் கொடுக்கவே வான் அவ்விடத்தை விட்டகல்கிறான்.
kavizar padatthaippattri sollumbothu kaiyyalum mozi, vaasipu anubavathai rammya maakkukirathu.suparB.