அழகியலுடன் கூடிய ஒரு கவித்துவமான சிறுகதையை வாசித்தது போன்ற உணர்வை தருகிறது இரானிய இயக்குனரான மஜித் மஜீதியின் ’தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்’ திரைப்படத்தைப் பார்க்கையில். புறநகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் கரீமிற்கு நெருப்புக் கோழி பண்ணையில் செய்யும் வேலைதான் வாழ்வாதாராம். நெடிது வளர்ந்திருக்கும் அக்கோழிகளை பராமரிப்பதும், அதன் முட்டைகளை வேனில் ஏற்றி சந்தைக்கு அனுப்புவதும்தான் அவன் அன்றாட வேலை. காது கேளாத மூத்த மகள், மிகவும் சூட்டிகையான மகன் மற்றும் இளைய மகளையும் கரீம் பண்ணையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் போஷித்து வருகிறான். வேலை முடிந்து தன் ஓட்டை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கரீம் வீட்டின் அருகில் மகன் தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் பாழடைந்து குப்பையும் சாக்கடையும் நிறைந்திருக்கும் தண்ணீர் தொட்டியில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபப்படுகிறான். மகளின் ஹியரிங் எய்ட் அங்கு தொலைந்திருப்பதை அறிந்து அவர்களுடன் சேர்ந்து தேடவே கடைசியில் அது கிடைக்கிறது. குழந்தைகள் தேவையில்லாமல் அந்தச் சாக்கடைப் பக்கம் போகக் கூடாது என்று திட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். மகளின் காதில் இயரிங் எய்டை அணிவித்து அவளிடம் பேசுகிறான். எதுவும் கேட்கவில்லையென்றாலும் அப்பா வருத்தப்படுவாறே என நினைத்து நல்லா கேட்குதுப்பா என்கிறார். சந்தேகத்துடன் மீண்டும் அவளிடம் பேசி அவளுக்குக் கேட்கவில்லை என்று அறிந்து துயரடைகிறான். பரீட்சை நாள் வேறு நெருங்கவே, சீக்கிரம் அதை சரி செய்து தருகிறேன் எனச் சொல்லிவிட்டு அவளைப் படிக்கச் சொல்கிறான். இந்நிலையில் அடுத்த நாள் பண்ணையிலிருந்து நெருப்புக் கோழி ஒன்று தப்பிச் சென்றுவிடுகிறது. கரீமின் கவனக் குறைவினால்தான் இது நிகழ்ந்தது எனச் சொல்லி அவனை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார்கள். இனி வருமானத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையில் அவன் தொலைந்த நெருப்புக் கோழியைத் தேடி காடு மலையென அலைகிறான். அது அவன் கண்ணில் தட்டுப்படவே இல்லை. மகளின் இயரிங் எய்டை நகரத்தில் இருக்கும் கடைக்குச் சென்று சரி செய்து தரும்படி சொல்கிறான். அவர்கள் இது இனி வேலை செய்யாது, புதிதாய்தான் வாங்க வேண்டும், இபோது ஆர்டர் குடுத்தால் தான் ஒரு வாரத்தில் செய்து தர முடியும் எனச் சொல்கிறான். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லையென்று வருந்திய கரீம் மறுநாள் வருவதாகச் சொல்லி எப்படியாவது அதை சரி செய்ய முடியுமா எனப் பார்க்கச் சொல்கிறான். நகரின் நெரிசலில் மனம் நொறுங்கி அலைந்து திரிகையில் அறிமுகமற்ற நபர் ஒருவர் அவன் பைக்கில் ஏறிக் கொண்டு ஓரிடத்தில் விடுமாறு சொல்கிறான். இறங்கியதும் அதற்கான கட்டணத்தைத் தந்து விட்டுச் செல்கிறான். நகரில் இதே போன்று பல பைக்குகள் வாடகைக்குப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்த கரீம் அன்றே அந்தத் தொழிலில் இறங்குகிறான். கடின உழைப்பிற்கு அஞ்சாத அவன் ஒரே நாளில் நிறைய பணம் சம்பாதிக்கிறான். கட்டிட இன்ஜினியர் ஒருவரின் கார் நடு ரோட்டில் நின்றுவிடவே அவர் கரீமின் பைக்கில் ஏறி தன் கட்டிடத்திற்குச் செல்கிறார். எவ்வளவு பணம் என்று எண்ணாமலேயே அவர் அவன் கையில் திணித்த நோட்டு அவன் கனவுகளை விரியச் செய்கிறது. திருப்பிக் கொடுத்துவிடலாம் என த்ரும்பிப் பார்தால் அவர் கட்டிடத்துள் மறைந்து விடுகிறார். அந்தக் கட்டிடத்தில் தேவையற்ற பொருட்களை எடுத்துச் செல்ல கொத்தனாரிடம் அனுமதி பெற்று எடுத்துச் செல்கிறான். ஒரு நாள் கதவு, மற்றொரு நாள் இரும்புக் கம்பிகள் என வேலை முடித்து திரும்புகையில் குருவியைப் போல ஒவ்வொரு பொருளாக தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறான். மீண்டும் தன் மகன் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றை சுத்தப்படுத்தி மீன் விடப் போவதாக சொல்லியதும் ஆத்திரப்பட்டு சிறுவர்களைத் துரத்துகிறான். ஒரு பக்கம் புதுத்தொழில் சூடுபிடிக்க, வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை வாங்கி வருகிறான். ஒரு நாள் சிறுவனும் அவன் தோழர்களும் சேர்ந்து புனரமைத்த கிணற்றைப் பார்க்கிறான் கரீம். சாக்கடை கழிவுகள் எல்லாம் மலைபோல ஒரு புறம் குவிந்துகிடக்க, சுத்தமான தண்ணீர் அந்த நீர்த்தேக்கத்தில் வெயில் பட்டு ஜொலித்தது. அவன் கண்கள் ஆச்சரியத்தில் நிறைகிறது. மகனை நினைத்துப் பெருமைப் படக்கூட முடியாத ஓட்டம் அவனுக்கு. ஓரளவு குடும்பம் நிம்மதியான கதியில் போய்க்கொண்டிருக்க, இடி போல அந்தச் சம்பவம் நிகழ்கிறது. கரீம் கட்டிட இடத்திலிருந்து கொண்டு வந்திருந்த பொருட்களை சீரமைத்துக் கொண்டிருக்கையில், ஏணியிலிருந்து தவறி விழ அவன் மீது இரும்புப் பொருட்கள் விழுந்து எழு முடியாமல் பெரும் காயமடைகிறான். வேலைக்குச் செல்ல முடியாமல் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாகிவிட்ட அவனுக்கு மனைவியும் பிள்ளைகளும் பணிவிடை செய்கிறார்கள். அவன் குணமாக சில நாட்கள் ஆகும் எனத் தெரிந்து மகன் வேலைக்குச் செல்கிறான்.