Page last updated at
Thursday, March 16, 2009 at 11:57:28 PM IST
என் பார்வையில் படைப்பாளிகள்
-
ச.முத்துவேல்
ச.தமிழ்ச்செல்வன்
வருடத்திற்கு ஒரு கதை என்கிற அளவில் கிட்டத்தட்ட 29 வருடங்களில், 29 கதைகள் எழுதியிருப்பவர் ச.தமிழ்ச்செல்வன். மேலும், சில கதைகள் என 32 சிறுகதைகள் எழுதியிருப்பதாக அறியமுடிகிறது.இந்தளவுக்கு சிரத்தையோடு இருந்ததால்தானோ என்னவோ, ஒவ்வொரு கதையும் சிறப்பான கதைகளாக இருக்கிறது. அனுபவித்தால் மட்டுமே உணர்ந்துபார்த்திருக்கக்கூடிய வகையிலான உணர்வுகளையும், கட்டங்களையும் எந்தக் கதாபாத்திரத்தை எழுதினாலும் அந்தக் கதாபாத்திரங்களின் வழி வெளிப்படுத்துகிற இவரின் ஆற்றல் ஆச்சரியமூட்டக்கூடியது. திரைப்படக் காட்சிகளைப்போல் தாவித்தாவிச் செல்லும் உத்தி, வாசகத் தேர்ச்சியைக்கோருவது. வறுமையை சித்திரமாக்குவதிலும், நடுத்தர மக்களின் , தம்பதிகளின் இயல்பான வாழ்வை, நகைச்சுவையாக சொல்வதும் இவரின் பெரும்பான்மையான கதைகளாக இருக்கிறது.இவர் பணிபுரிந்த, இராணுவம் சார்ந்தும் சில கதைகள் எழுதியிருக்கிறார். தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் எளிய மனிதர்களின், சிறுவர்களின் சங்கடங்களை தொழில்சார் உடல் உபாதைகளை , வறுமையை பதிவு செய்திருக்கிறார். மேஜிகல் ரியலிசம் எனப்படும் மாய யதார்த்தவாதம் இவர் கதைகளில் இயல்பாகவும், பொருத்தமாகவும் இடம்பெற்றுள்ளது.
இவரின் வெயிலோடுபோய்’ என்கிற சிறுகதையே பூ திரைப்படமாகப் பரிணாமம் கண்டிருக்கிறது.இந்தப் படத்திற்கு துணைசேர்க்கும் வகையில் அமைந்துள்ள இவரின் மற்றொரு கதை ‘அசோகவனங்கள்’.
இருபத்தொன்பது கதைகளுக்குப் பிறகு மேற்கொண்டு சிறுகதை எழுதியதாக அறியமுடியவில்லை. நேரடியாக சமூகப்பணிகளில் இறங்கி களப்பணியாற்றும் இவர் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (தமுஎச)பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கிறார். தொடர்ந்து அரசியல், சமூகக் கட்டுரைகளை நிறைய எழுதிவருகிறார். பத்தமடை என்கிற ஊரைச் சார்ந்தவர். இராணுவத்தில் பணிபுரிந்தவர்.மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் பேரர்.இவரின் இளைய சகோதரர்கள் எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச,முருகபூபதி ஆவர்.
இவரின் படைப்புகளாவன
1.வெயிலோடு போய்
2. வாளின் தனிமை
இந்த இரண்டு சிறுகதைத்தொகுப்புகளும் சேர்ந்த முழுத்தொகுப்பு
’ச.தமிழ்ச்செல்வன்’ கதைகள் என்று ஒரே புத்தகமாகவும் கிடைக்கிறது.
இவரது அனைத்து(32) சிறுகதைகளும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் என்ற தலைப்பில்தமிழினி வெளியீடாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இதுதவிர இவரின் அரசியல், சமூகம் சார் கட்டுரை நூல்கள் சில
1. ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
2. பிள்ளை பெற்ற பெரியசாமி
3. 1947
4. பேசாத பேச்செல்லாம்
5. அரசியல் எனக்குப் பிடிக்கும்
6. ஆண்கள் சமைப்பது அதனினும் நன்று
7. இந்திய வரலாற்றில் இளைஞர்கள்
8. நமக்கான குடும்பம்
மற்றும் பல.
இவரின் வலைப்பூ.
( ச.தமிழ்ச்செல்வன் கதைகள் என்கிற 29 கதைகள் அடங்கிய , அருந்ததி நிலையம் பதிப்பகத்தாரின் மூலம் வெளிவந்துள்ள புத்தகத்தை முன்வைத்து எழுதப்பட்டது)
இணையத்தில் படிக்க சில கதைகள்
1. வெயிலோடு போய்
2. 26 ஆம் பக்கத்து மடிப்பு
சென்ற இதழில் --
ஜே.பி.சாணக்யா
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :