Page last updated at
7/13/2010 11:04:41 PM IST
ஒரு தகடும் மூன்று ஆணிகளும் - கரன் கார்கி
குன்றுகள் நிறைந்த ஒரு சமமற்ற நிலப்பரப்பில் சிலர் அகழ்ந்து கொண்டிருந்தனர்.
ஏராளமான பள்ளங்கள் சமீபத்தில் தொண்டப்பட்டவை தான். முகம் முழுக்க முடி முளைத்த நடுத்தரமான வயதுடையவன், " இது தான்.. இது தான்.. இதுவேன் தான்" என்று கத்திக் கொண்டு பள்ளத்திலிருந்து மேலேறி வந்தான். அவனது முகம் சிவந்து வியர்த்துக் கொட்டியது.
உள்ளதை உள்ளபடியே பதிவு செய்யும் மிக நுட்பமான கருவிகளுடன் அந்தப் பள்ளத்தை நோக்கி ஓடினார்கள். பள்ளத்தைச் சுற்றி வந்து பல கோணங்களின் பதிவு செய்தார்கள். ஆனாலும் அவர்கள் முகம் ஏனோ திருப்தியற்று இருப்பதாய்த் தோன்றிது.
தாடிக்காரன் அவசரமாய்ப் பள்ளத்தின் சரிவில் இறங்கி ஓடினான். இப்போது அவனோடு சேர்ந்து பள்ளத்தின் ஐந்து பேர், களைத்து ஆனால் பரபரப்படைந்து நின்றிருந்தார்கள். ஒருவன் நீளமான சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு அவசர அவசரமாய்ப் புகைத்தான். மற்றவன் தரையில் கிடந்த மூன்று பெரிய இரும்பு ஆணிகளை தாடிக்காரனிடம் கொடுத்தான். அவனுடைய வலுவான கரங்களால் கனம் தாங்க முடியாமல் கடின முயற்சியோடு கண்களில் ஓற்றிக் கொள்ள முயன்று கனமான ஆணிகளைத் தவறவிட்டு அதன் மீது சரிந்து விழுந்து அணிகளை முத்தமிட்டான்.
ஒரு ஆணியைத் தூக்கிப் பள்ளதின் விளிம்பில் நின்றிருந்த காட்சிப் பதிவாளர்களுக்கு மகிழ்ச்சிப் பொங்கக் காட்டினான்.
அந்தக் கொலைக்குப் பயன்பட்ட இரும்பு ஆணிகள் துருவேறாமல் அப்படியே இருந்தன. பள்ளத்தில் தேங்கி நின்ற சூரிய ஒளியால் ஆணிகள் சுடர்ந்தன. அந்தப் பொழுதில் நிழல்கூட அவர்களது பாதங்களுக்கடியில் மறைந்து கொள்ள முயன்றது.
தாடிக்காரன் ஆணிகளின் கனம் தாங்காமல் மூன்றையும் பெட்டியில் வைத்தான். ஏற்கனவே பள்ளத்தில் இருந்த ஐவரில் ஒருவன் ஆணிகள் கண்டெடுத்த பகுதியில் இருந்து ஒரு தகட்டையும் எடுத்து தாடிக் காரனிடம் கொடுத்தான்.
‘ இனி எனக்கு மரணம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சியே’ என்று தாடிக்காரன் திருப்தியடைந்த மனநிலையில் கத்தினான்.
வெகு நாட்களுக்குப் பிறகு அவன் தொண்டையில் அடைப்பட்டுக்கிடந்த வார்த்தைகள் வெளியே வந்தன.
அகழ்வாயைத் தொடங்கிய சில நாட்களிலேயே அவன் பேசுவதை நிறுத்தி விட்டான். வரைபடங்களும் கருவிகளும் அவனுக்காகப் பேசின, பலரும் பல நேரங்களில் சொன்னார்கள், " அவன் வார்த்தையை எங்கோ புதைத்து விட்டான் அதைத்தான் தேடித் கொண்டிருக்கிறான்" என்று இப்போதைய அவனது பெரும் கத்தல் அவனது சகாக்களுக்கு மகிழ்ச்சியைக் கண்டுபிடித்து விட்டான் என்று ஒருவர் காதில் மற்றவர் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
தாடிக்காரன் தகட்டைத் தூக்கிக் கொண்டு மேட்டில் ஏறினான். அவன் முகத்தில் காணப்பட்ட உணர்ச்சிகளைச் சொல்ல யாராவது வார்த்தையைக் கண்டுபிடித்தால் அது புதிய கண்டுபிடிப்பாக இருக்கும்.
"இதுவேதான் இதுவேதான் !" மேட்டில் நின்றிருந்தவர்களைப் பார்த்துக்கத்தினான்.
ஒரு காட்சிப் பதிவாளன் தகட்டின் முன்பாக மண்டியிட்டான். பிறகு தரையில் தவழ்ந்து போய் தகட்டில் முத்தமிட்டான்.
பள்ளத்தில் இருந்த நான்கு பேர் ஆணிகள் இருந்த பெட்டியை மேட்டிற்குச் சுமந்து வந்தார்கள்.
கடைசியாக ஒருவன் பள்ளத்தை விட்டு மேலே வந்தான். அவனது முகம் நன்றாக மழிக்கப்பட்டிருந்தது. சுத்தமாக பளீரென்று இருந்த கையில் ஆணிகளை அடிக்கும் சுத்தியல் போன்ற ஒரு பொருளை எடுத்து வந்தான்.
தகடு, மூன்று ஆணிகள் அடங்கிய பெட்டியுடன் அதை வைத்து விட்டுத் தன் சக தோழர்களைப் பார்த்துச் சிரித்தான்.
அவர்கள் மகிழ்ச்சியால் ‘ ஓ ‘ வென்று கத்தினார்கள் பிறகு ஒருவரை ஒருவன் இறுக்கமாகத் தழுவினார்கள்.
இந்தக் காட்சிகளும் அதைப்பற்றிப் பலவிதமான தகவல்களும் அன்று மாலைக்குள் உலகம் முழுவதும் பரவி விட்டது.
ஒரு திக்கிலிருந்து பலவிதமான காட்சிபதிவு சாதனங்களைச் சுமந்தபடி வாகனங்கள் குன்றுகளடர்ந்த பகுதிக்கு விரைந்தன.
ஐந்துக்கும் மேற்பட்ட வானூர்திகள் தும்பிகளை போல வட்டமடித்து தரையிரங்க இடந்தேடின.
அந்த மூன்று பொருட்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன கருவிகள் பல கோணங்களில் பதிவு செய்து கொண்டன.
நேரடியாகக் காட்சிப்படுத்தி அதை பூமியெங்கும் மக்கள் கானும்படி செய்தார்கள்.
உலகின் மூலை முடுக்கெங்கும் அதுவேதான் முக்கியச் செய்தி.
அன்றைய இரவில் சிங்கத்தின் விந்துவால் நிறப்பப்பட்ட காமமடங்கா பெண்ணொருத்தி ஆயிரம் மிருகங்களைப் பெற்றெடுத்தாள்.
அவை பார்க்க மனிதர்கள் போல இருந்தன. பெண்ணைப் புணர பழகிவிட்ட சிங்கம் ஓர் இரவில் கருவாகி உலவாகி நிற்கும் தம் புதல்வர்களைப் பார்த்து குலைத்தது.
புணரும்போது அவளது தலைமுடியை நக்கி விழுங்கியதால் இச்சை தீரா கணவாய் பேயவளின் கூந்தல் அதன் தொண்டையில்
சிங்கம் குலைத்தது,.
அதன் குலைப்பை தாய் மொழி பெயர்த்தாள்,
" போங்கள் போங்கள் பசதீர மனிதர்களை உண்டு வாருங்கள் விடிவதற்குள்"
ஓர் இரவில் முப்பதாயிரம் மனிதர்களை கலப்பின குரூரங்கள் நாசம் செய்து பசியாறின.
உலகமே கண் மூடியிருந்த இரவில் அய்யோ பாவம் !
எல்லா காட்சிப் பதிவாளர்களும், செய்தியாளர்களும் குன்றுகளடந்த பகுதியின் அகழ்வராய்ச்சி பள்ளத்தைச் சூழ்ந்திருந்தார்கள்.
கண்டெடுக்கப்பட்ட அந்த மூன்று பொருட்கள் பற்றி செய்தியால் பூமியை நன்றாகச் சுற்றி ஒரு முனையில் தாடிக்காரன் தன் கையில் பிடித்திருந்தான்.
விலங்குகள் பற்றி மட்டுமே ஒளிபரப்பும் விலங்கு தொலைக்காட்சியில் அன்று ஏனோ நரிகளையும் பாம்புகளையும் காட்டினார்கள்
கலப்பின வினோதங்களின் குரூரத்தை ஒளிபரப்பினால் மனிதர்கள் நடுநடுங்கி விடுவார்கள் என்று நிறுவனம் நினைத்திருக்கலாம்.
அந்த ஒரு நாளிலேயே , மூன்று ஆணிகள் ஒரு தகடு, ஒரு ஆணியடிக்கும் சுத்தியல் போன்ற ஒரு கருவி உலக மக்களுக்கு நன்கு தெரிந்த பொருளாகிவிட்டது. அந்த நீள கட்டையையும் குறுக்கு கட்டையையும் மண் தின்று விட்டது என்று பேட்டியில் சொன்னான் தாடிக்காரன்.
மைக்கல் ஏஞ்சலோ மல்லாந்து படுத்தபடி கடரைக்கடியில் தீட்டிய ஒலியங்களுடன் கூடிய அந்த அழகிய மாளிகைக்கு போய்ச் சேர்ந்தன அந்தப் பொருட்கள்.
பல ஆயிரம் மக்களுக்கு முன்பாக அவர் அதை புனிதப் பொருளாக அறிவித்தார். உலகமெங்கும் அந்தப் பேச்சு பிரதிகள் விற்று தீர்த்தன. இன்னும் பல பிரதிகளை இயந்திரங்கள் ஓய்வின்றி உற்பத்தி செய்தன.
தாடிக்காரன் உலகெங்கும் அறியப்பட்டவனாகி விட்டான். பெருஞ்செல்வம் அவனை வந்து சேர்ந்தது. அவன் தன் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தான். அவர்கள் விருந்தின் போது திராட்சை ரசத்தைப் பருகி கோப்பையைக் கீழே வைத்த போது அவர்களின் உதட்டோரத்தில் ரத்தம் வடிந்திருந்தது. அவர்களில் ஒருவன் அதைச் சுட்டிக் காட்டினார்.
"இல்லை, நூற்றாண்டு மது அப்படித்தான் இருக்கும்" விருந்தளித்தவன் சொன்னபடியே தனது கோப்பையைப் பார்த்தான். கோப்பையில் மிச்சமிருந்தது ரத்தம்தான்.
‘ரத்தம், ரத்தம்’ நடுக்கமுற்று ஒருவன் கத்தினான். பெருங்கூச்சலுக்கு மத்தியில் தாடிக்காரன் விருந்து கூடத்தை விட்டு வெட்ட வெளிக்கு ஓடி வானத்தை நோக்கி கையுயர்த்தியபடியே வெகு நேரங் கிடந்தான்.
விருந்தினர்கள் பலரும் பலவிதமாய்க் கத்தியபடி அவனோடு சேர்ந்து அதே முறையில் வானத்தைப் பார்த்துப் புலம்பினார்கள்.
திழரெனக் கருமேகம் திரைபோல அவர்கள் மேலாகத் தவழ்ந்து தலைக்கு மேலாக நெருக்கமாக இறங்கி வந்தது.
சிலர் வெறுப்படைந்து மேகத்தைச் சபித்து வடிவமற்ற கற்களால் மேகத்தைத் தாக்கினார்கள்.
"திராட்சைமது ரச புட்டிகளுடன் வேறு சில புட்டிகளும் கலந்து விட்டன."
முன்னிப்பு கோரும் குரலில் ஒருவன் தாடிக்காரன் அருகே போய்ச் சொன்னான். கூச்சல் அதிகமாய் இருந்ததால் அது யார் காதிலும் விழவில்லை. துவறிழைத்தவன் சத்தமாகக் கத்தினான். ஒரு பயனும் இல்லை
அவன் குரல் கேட்காதபடி அவர்கள் ஓசை அதிகமாயிருந்தது, தவறுழைத்தவனின் குரல் அவனிடத்திலேயே திரும்பி விட்டது.
ரத்தம் மிஞ்சிய கோப்பைகளை அவர்கள் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். திராட்சை ரசம் தேங்கிய கோப்பைகளை வைத்திருப்பவர்கள் மதிப்பற்று தலைகளைத் தொங்க விட்டபடி நழுவினார்கள். அவர்கள் அதிஷ்ட மற்றவர்கள்.
தாடிக்காரன் அகழ்வுப் பணியைத் தொடர்ந்தான். மிகப் பெரிய பள்ளம் அதே ஐந்து தோழர்கள். நடுபகல் நேரம் சூரியனின் ஒளி அவர்கள் மூழ்குமளவு பள்ளத்தில் தேங்கி நின்றது.
வேறொரு பள்ளத்தில்அவர்கள் மீண்டும் ஒரு தகட்டையும் மூன்று ஆணிகளையும், ஒரு சுத்தியல் போன்ற கருவியையும் கண்டார்கள் தாடிகாரனின் முகத்தில் அப்போது ஏற்பட்ட உணர்வுகளைச் சொல்ல யாராவது வார்த்தை கண்டுபிடித்தால் நல்லது.
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :