உலர்ந்த உதடுகள் ஜன்னல் கம்பிகளில் பதிய மழை வெறிக்கிறேன். சத்தமின்றி பெய்கின்ற அடர் நீர்த்துளிகள் சிறு சிறு குமிழ்களாகி மெளனமாய் உடைகின்றன. சப்தங்கள் மரணித்த மழை ஊனப் பறவையாய் துடிதுடித்து அடங்கும் தருணம் எனக்கு மட்டும் கேட்கிறது நிசப்தத்தின் சிரிப்பொலி. உச்சத்தின் முனகல்களை அவள் வெளிப்படுத்த எத்தனித்தபோது உருவம் பெற்ற நிசப்தம் அவளது சப்தங்களை தின்று என்னை நோக்கி வெறித்தது. நிர்வாணத்தில் சுகித்திருந்தவனின் கரம் பற்றி இழுத்துப்போனது. இருளடைந்த அறைக்குள் நுழைந்து என்னை புணர் என்றது. மறுப்பேதும் உரைக்காமல் உடல் உதறி நிசப்தத்திற்குள் நுழைந்துகொண்டேன் நான். அறைக்குள் மெல்ல நுழைகிறது நிசப்தம். அரூப அலையாய் என்னை சூழ்ந்துகொள்கிறது. பின், பேரானந்தம் தரும் கரங்களால் என்னுயிரை திருகி எறிந்து வெற்றுடல் மேல் உமிழ்ந்து ஒன்றும் அறியாத பாவனையுடன் வெளியேறியது. இப்போது, ஓயாத பெரும் இரைச்சல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது நிசப்த கணங்களில்.