Page last updated at
Monday, October 05, 2009 at 11:57:28 PM IST
அமுத தமிழில் பெயர் சூட்டுவோம்
இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள / சேமிக்க :
"Tamil Names"
உலகின் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றில் மாறிப் போனவை பலப்பல. மாறாதிருப்பவை ஒரு சிலவே . அவற்றுள் முன்னைப் பழமைக்குப் பழமையாய் பின்னைப் புதுமைக்குப் புதுமையாய் இருப்பது நம் தாய்த்தமிழும் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கமும் தமிழகமும் ஒத்த வளம் உடையதாய் இருந்தன. கடற்கலம் கொண்டு தமிழன் வணிகம் புரிந்தமை இதற்குச் சான்று கூறும்.
வாழ்வியல் தத்துவத்தால் வளத்தால், கல்வியால் அறிவியலால், வேளாண்மையால் பெரும் உச்சத்தில் இருந்த தமிழர் இன்று எல்லாவற்றையும் மெல்ல இழக்கும் கொள்கையர் ஆயினர் முன்னோர் தந்ததை வளர்க்க வழிகாணாவிடினும் அதனை அழிக்கத் தலைப்பட்டு இருப்பது வரலாற்றுப் பிழையாகும்.
தமிழ்க் குடும்பங்கள் இன்று தாம் யார் என அறிதலையும் உலக மாந்தரில் தமக்குள்ள பண்டைய இடம் குறித்தும் இன்றைய இடம் குறித்தும் சிந்தித்தலையும் செய்யக் கூடாத செயலாகக் காணுகின்றன. ஆகவேதான் தங்களின் குழந்தைகளுக்கு அடையாளங்களை அறியாது இழந்துவரும் நிலை தொடர்கிறது.
அவற்றில் ஒன்றுதான் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்ச் சூட்டாமல் பிறமொழிக் கலப்பில் பெயர்ச் சூட்டி மகிழும் போக்கு இது மேம்போக்காய் நோக்கினும், தன் தாய்மொழியில் குழந்தைகளுக்குப் பெயர்ச் சூட்டி கொள்ளாத மக்களின் அறிவுடைமை, அவ்வினத்தின் பண்பாடு, மொழியின் சிறப்பு அனைத்தையும் கேள்விக் குள்ளாக்கின்றன அல்லவா?
‘’ ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவ்வினத்தின் மொழியை அழித்து விடுங்கள் இனம் தானாக அழிந்துவிடும்’’ என்றான் இங்கர்சால்.
ஓர் இனம் எதை இழந்தாலும் மீட்டுக்கொள்ள இயலும். ஆனால் தாய்மொழியை இழப்பது என்பது இந்த உலகில் வாழ்வதற்கான வாழ்வுரிமையை இழப்பதற்கு ஒப்பாகும். பின்னர் அகதி வாழ்வே நிலையாகும். பிறரை அண்டிப்பிழைக்கும் வாழ்வு தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் தாய்மொழியின் கூறுகள் பல்வகையால் ஓர் இனத்தின் வாழ்வியல் நிலைகள் அனைத்திலும் பரவிக்கிடக்கின்றன. தாய்மொழி அம்மொழி பேசும் மக்களின் வாழ்விட, வாழ்நில ஆவணமும் ஆகும். தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை இழக்கும் இனம் நாடோடியாய் மாறும்; ஒவ்வொரு அடையாளங்களாய் இழந்து இறுதியில் தங்களுக்கான நிலமின்றி பிறநாட்டாரை ஒண்டி அண்டி பிழைக்கும் அவலநிலைக்கே ஆளாகும்.
ஆகவேதான் உயர்நிலை கண்ட நாட்டினர் அனைவரும் தம் அனைத்து அடையாளங்களையும் தத்தமது தாய்மொழியைக் கொண்டே அமைத்து கொள்கின்றனர். அது கல்வியாயினும், நீதியாயினும், அரசாட்சியாயினும், பண்பாடு ஆயினும், பெயராயினும், தங்கள் மொழிக்கும் நிலத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைக்கின்றனர்.
அவ்வகையினாலேயே தமிழர்களாகிய நாமும் நம் முன்னோடிகள் நம்மிடம் தந்துப்போன மொழியையும், நிலத்தையும், பண்பாட்டையும், காத்திட நம் தாய்மொழியாம் தமிழில் நம் குழந்தைகளுக்குப் பெயர்ச் சூட்டி மகிழ்வோம்.
குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் :
- அமுதவன்
- இறையன்பு
- மலர்விழீ
- பூங்குழலி
- தமிழரசி
- யாழினி
- கார்முகிலன்
- செந்தமிழரசன்
- சுடரோள்
- வெண்நிலா
- தமிழ்ச்செல்வி
- யாழினி
மேலும் தமிழ் பெயர்களுக்கு ...