"இத்திரைப்படத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது இருவரின் கெமிஸ்டரி."
'இது காதல் கதை அல்ல, காதலைப் பற்றிய ஒரு கதை' என்ற சப் டைட்டிலுடன் ஆரம்பிக்கிறது தெள்ளிய நீரோடை போல இயக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம். கதையின் நாயகன் லூயி வெர்காஸ்(Antonio Banderas) பணக்காரன், அழகன். தன் ஊரான க்யூபாவில் காபி எஸ்டேட் வைத்திருப்பவன். தனக்கு வரப் போகும் மனைவி பற்றி அழகான சித்தரத்தை மனதில் தேக்கி வைத்திருப்பவன். அமெரிக்காவில் இருக்கும் ஜூலியா ரசல் (Angelina Jolie) என்பவளை கடிதங்களின் மூலம் தனக்கானவள் என்று கண்டடைகிறான். அவளை நேரில் சந்திக்க பயணப்படுகிறான்.
ஃபோட்டோவில் இருக்கும் ஜூலிக்கும் நேரில் இருப்பவளுக்கும் துளியும் சம்பந்தமில்லையே என அவன் திகைக்கையில் பேரழகியான அவள் அவனிடம் தன் புகைப்படத்தை வேணும் என்றேதான் மாற்றி அனுப்புள்ளேன், நான் அழகி எனத் தெரிந்துவிட்டால் நீங்கள் அதற்காக மட்டும் என்னைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றுதான் அப்படிச் செய்தேன், உங்களுக்கு சம்மதம் இல்லையென்றால் நாம் பிரிந்துவிடலாம் என்கிறாள். லூயி அவள் அழகில் ஏற்கனவே கிறங்கிப் போயிருக்கவே, அவசரமாக மறுத்து தான் கடிதத்தில் குறிப்பட்டது போல ஏழை இல்லை, பெரும் பணக்காரன் என்கிறான். செல்வந்தன் ஒருவனின் மனைவியாக இருப்பதில் உனக்கு ஏதும் சிரமம் இருக்குமானல் சொல்லிவிடு நாம் பிரிந்துவிடலாம் என்கிறான். ஜூலி புன்னகைத்தவாறே நாம் இருவருமே பொய்யர்கள் என்கிறாள். அன்றே அவர்கள் திருமணம் நடக்கிறது. குதிரையில் ஏற்றி தன் காதல் மனைவியை அரண்மனை போலிருக்கும் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான் லூயி.
அவளுக்குத் தேவையான சுதந்திரத்தை தருகிறான். தன்னைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள அவகாசம் அளித்தபின்னரே அவளுடன் உடலால் இணைகிறான் லூயி. யாரோ ஒருவரின் படுக்கை அறைக்குள் நுழைந்துவிட்டது போல சில நிமிடங்கள் மெல்லிய இசையின் பின்ணனியில் அப்பட்டமான கூடல் காட்சிகள். அதைத் தொடர்ந்து அவன் வேலைகளில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறாள் ஜூலி. ஆரம்ப மோகங்கள் மட்டும் இல்லாமல் தன் மனைவியை வெகுவாக நேசிக்கிறான் லூயி, அவளுக்கு தன் வங்கிக் கணக்கில், மற்றும் தொழிலில் சம உரிமை அளிக்கிறான். இரவு பகல் பாராமல் அவனின் காதல் ஆயிரம் சிறகுள்ள அவளின் மோகங்களில் சிக்கிக் கிடக்கிறது. இதற்கிடையில் ஜூலியாவின் சகோதரி எமிலி அவனைச் சந்தித்து தன் தங்கையிடமிருந்து வந்த கடிதத்தில் இருப்பது நிச்சயம் அவள் கையெழுத்து இல்லை என்கிறாள். அவன் குழம்புகிறான். அவ்வப்போது அவள் நடவடிக்கையில் சிறு சந்தேகம் வரும்போது அதைப் பற்றி அவன் கேட்கும் போதெல்லாம் நைச்சியமாக பேச்சை மாற்றி அவனை படுக்கையில் வீழ்த்திவிடுவாள் ஜூலி. எதிர்பாராத அதிர்ச்சியான ஒரு நாளில் அவள் காணாமல் போகிறாள் லூயின் மொத்த சொத்தையும் சுருட்டிக் கொண்டு. பித்து பிடித்த நிலைக்குப் பொன லோயி அவளைக் கண்டுபிடித்துக் கொள்வதற்காக துப்பாக்கியுடன் கிளம்புகிறான் துணையாக முன்பு தான் சந்தித்த டிடெக்டிவ் வால்டருடன் (Thomas Jane).
ஹவானாவில் ஒரு ஹோட்டலின் ஜூலியாவைப் பார்க்கிறான் லூயி ஆனால் அவள் கர்னல் ஒருவரின் காதலியாக இருக்கிறாள். பெரும் அதிர்ச்சிய்டைந்தாலும் இனம் தெரியாத உணர்வுகளால் அலைக்கழிப்படுகிறான் லூயி. அவனுடைய துப்பாக்கியை வால்டர் எடுத்துக் கொண்டு அதில் வெற்று ரவைகளை நிரப்பிவைத்துவிடுகிறான்.அன்றிரவு ஜூலியின் அறைக்கு ஆத்திரத்துடன் செல்கிறான் லூயி. ஜூலியாவின் மீது உள்ள காதலால் அவளைக் கொல்ல நினைத்தாலும் அவனால் அதை செயல்படுத்தமுடியவில்லை. ஏன் ஏன் இபபடிச் செய்தாய் என அவளிடம் கோபத்துடன் கழுத்தைப் பிடித்துக் கேட்கிறான். அவள் அவனிடமிருந்து விடுபட்டு தன் பழைய வாழ்க்கையை, போனி காஸெல் என்ற பெயருடைய அவள் அனாதை இல்லத்தில் வளர்ந்த கதையை, அங்கு தன்னுடன் இருந்த ஒரு இளைஞனுடன் தப்பித்து அதன் பின் இருவரும் சேர்ந்து சிறியதும் பெரியதுமாக குற்றங்கள் செய்து, தங்களை புறக்கணித்த சமுதாயத்தை ஏமாற்றி பிழைத்தாக சொல்கிறாள். அதன்பின் குறி வைத்து இவனை ஏமாற்றினார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறாள். 'என்னைக் கொன்று விடு' என்ற ஜூலியாவைப் தீராக் காதலுடன் பார்த்து 'நீ இன்னும் என் மனைவிதான், உன் பழைய பெயர் எதுவோ அது பற்றி எனக்கு அக்கறையில்லை, நீ என்றும் எனக்கு ஜூலியாதான், ..என்னுடன் வந்துவிடு, எல்லாவற்றையும் மற', என்கிறான்.
டிடெக்டிவ் வால்டர்தான் ஜூலியாவின் பழைய காதலன் என்று லூயிக்கு தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து ஜூலியாவை மீட்க வோல்டரை சுட்டுவிடுகிறான் லூயி(அதில் உண்மையான குண்டுகள் கிடையாது). செத்தவன் போல நடித்த வால்டரை ஜூலியா சாமர்த்தியமாக அப்புறப்படுத்துகிறாள். அவள் இப்போது இருதலை கொள்ளி எறும்பைப்போல தவிக்கிறாள். வோல்டர் அவளை துன்புறுத்தி விருப்பமற்ற அவளுடன் வன்கலவி செய்கிறான். லூயின் அப்பழுக்கற்ற காதல் அவளை கொல்லாமல் கொல்கிறது. பழைய காதலன் வோல்டரோ அவளை இறுகப்பற்றிக் கொண்டு விட மறுக்கிறான். லூயி உனக்கானவன் அல்ல, நான் தான் உன் முதல் ஆண் கடைசியும் நான் தான், அவனை மற இன்று இரவு அவனை நீ கொன்றேயாக வேண்டும் என கட்டளையிட்டு அனுப்புகிறான். பின் தொடர்ந்து வந்த லூயி இதைப் பார்த்து மீண்டும் அதிர்ச்சி அடைகிறான். மெளனமாக வீடு திரும்புகிறான். ஜூலி எலி மருந்து கலக்கிய காபியை அவனுக்குக் குடிக்கத் தருகிறாள். லூயி பேச்சுனூடே தான் அவளைப் பின் தொடர்ந்து வந்த விதயத்தை சொல்கிறான், நீ யாராக இருந்தாலும், நல்லவளோ கெட்டவளோ இன்னும் இந்த நிமிடம் வரையிலும் உன்னை நான் காதலிக்கிறேன்...நீ என்னைக் கொல்லப் போவது தெரிந்தும், என்று சொல்லியபடி அதைக் குடிக்கிறான். அழுதபடி இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜூலி தடுப்பதற்கு முன் அவன் துடிக்க ஆரம்பிக்கிறான். அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுகையில் பின் தொடர்ந்த வால்டர் அவளைப் படித்து அவள் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்துகிறான். என் மனைவியை விடு என்று கத்தியபடி லூயி துப்பாக்கியை எடுத்து அவனை மிரட்டுகிறான். அத்துப்பாக்கியில் போலி குண்டை மாற்றி வைத்த தைரியத்தில் வால்டர் சுடு என்ற பாவனையில் முன் நின்ற வால்டரை சுட்டுவிடுகிறான். துப்பாக்கி வெடித்து ரத்தம் பாய்ந்து சரிகிறான் வால்டர், அவன் அதிர்ச்சியுடன் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கும் முன் லூயிடமிருந்து துப்பாக்கயை வாங்கி ஜூலி மறுமுறை சுடுகிறாள். i love you Julia என மறுபடி மறுபடி அரற்றுகிறான் சாவின் விளிம்பின் நின்று கொண்டிருந்த லூயி. துடிக்கும் மனதுடன் ஜூலி நானும் உன்னைக் காதலிக்கிறேன் லூயி என்னை விட்டுப் போய்விடாதே...கொஞ்சம் பொறு என்று அழுகிறாள். ஆனால் லூயி அவள் மடியிலேயே இறந்து போகிறான்.
கொலைக்குற்றவாளியான ஜூலி பாதிரியார் ஒருவரிடம் தன் கதையை சொல்கிறாள். கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலுமாக பயணப்படும் கதையின் காட்சியமைப்புக்கள் சீரான ஒழுங்கிலிருக்கிறது. காதல், காமம், துரோகம், தண்டனை என மிக ஆழமான விதயங்களை நுட்பமாகவும் அழகுணர்வோடும் இத்திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற வாக்கியமான 'Fraility thy name is woman' எனும் வாக்கியத்தை நினைவுபடுத்துகிறது இப்படம்.
இத்திரைப்படத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது இருவரின் கெமிஸ்டரி. Made for each other போன்ற தோற்றமாகட்டும், அவர்களின் கொந்தளிக்கும் இளமையாகட்டும், ஒருவர்க்கான மற்றொருவரின் தேவையை உணர்த்தும் body language ஆகட்டும் இருவரின் மிகையில்லாத நடிப்பாகட்டும் இருவருமே இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். நெகட்டிவ் காரெக்டரை அற்புதமாக உள்வாங்கியிருக்கும் ஏஞ்சலினா சிறு புன்னகையாலும் பார்வையாலும் கண்ணீராலும் வீழித்துவது லூயியை மட்டுமல்ல, திரைக்கு வெளியிலிருது பார்த்துக் கொண்டிருக்கும் யாவரையுமே கவர்கிறாள்.
இத்திரைப்படத்தை அப்படியே தமிழில் ரீ மேக் செய்தால் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்ற திடீர் எண்ணம் உருவான அடுத்த நொடி நம் கலாச்சார காவலர்கள், சென்ஸார் கிடிக்கிப் பிடிகள் எல்லாம் நினைவுக்கு வரவே எனக்குள் சிரித்துக் கொண்டேன். அப்படியே ரீமேக் செய்தால் வோல்டர் ரோலில் சிம்பு (சிலம்பரசன் ரசிகர்கள் மன்னிக்க) அதிகம் பொருந்துவார் என நினைக்கிறேன். அந்த இருவரின் இடமும் யாராலும் நிரப்ப முடியாத நிலையில் இன்னும் என் கண்களை விட்டகல முடியாமல் உறைந்து போன காட்சியாய் இருக்கிறது.