‘தீர்ப்புகளின் காலம்’ நாவலின் சுருக்கம்
வடக்குத்தெருவில் தலித்துக்கள். தெற்குத் தெருவில் ஆதிக்க சாதிக்காரர்கள். கிழக்கிலிருந்த பண்ணையார் தோட்டக் காடுகளில் பாடுபட்டுத்தான் தலித்துக்களின் பிழைப்பு.
தெற்குத்தெருக்காரர்களுக்குச் சாராயம் காய்ச்சும் தொழில். தலித்துக்கள் அங்கே வருகைத் தருவது வாடிக்கை. தெற்குத்தெருக்காரர்களுக்குப் போதை ஏறும் தருணங்களில் வடக்குத் தெருவுக்கு வந்து தலித் பெண்களை வல்லடியாய் வேட்டையாடுவது வழக்கமாயிருந்தது. தட்டிக்கேட்பதற்குத் தலித்துக்கள் பலமில்லாதிருந்தார்கள்… பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, ஆள் எண்ணிக்கையிலும்.
அப்படி ஒருநாள் வேட்டையாடப்பட்டவள்தான் ‘தெய்வானை’ என்கிற தலித் பெண். இரவு எட்டுமணிக்கு அவளுக்குத் திருமணம். ஏழுமணிக்கே தெற்குத்தெரு சண்டியர்கள் மூன்றுபேர்கள் திரண்டு வந்து தெய்வானையைத் தூக்கிக்கொண்டுபோய் தெரு அம்மன் கோயிலுக்கு முன்னால் விரிந்து கிடந்திருந்த பாறை மறைவில் கிடத்திப் பாலியல் வன்கொடுமைச் செய்துவிட்டு அவளைக் கொன்றும்விடுகிறார்கள். அவளின் பெற்றோர் மற்றும் தெருக்காரர்களின் முன்னாலே இந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.
கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் அதே எண்ணத்துடன் ஒருநாள் வடக்குத் தெருவுக்குள் போதையுடன் நுழைந்த ஆதிக்கச் சாதிக்காரனை தலித் பெண் ஒருத்தி மிதித்துத் தள்ளிவிடுகிறாள். எக்குத்தப்பாய் அடிபட்டிருந்ததால் அன்றிரவே இறந்தும்போய்விடுகிறான் அவன். அவன் தெய்வானையின் கொலையில் சம்பந்தப்பட்டவன். ஏற்கனவே அந்தத் தலித் பெண்மீது ‘தெய்வானை’ இறங்கிக்கொண்டிருந்ததாக ஊரில் பேச்சிருந்தது. அதனால் தெய்வானைத்தான் தெற்குத்தெருக்காரனை அடித்துச் சாகடித்துவிட்டதாக இரண்டு தெருக்காரர்களுமே நம்பத் தொடங்கினார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில், தெய்வானையின் கொலையில் சம்பந்தமுடையவர்கள் இரண்டுபேரும் அடுத்தடுத்து இயல்பாக மரணம் அடைந்தார்கள். தெற்குத்தெருக்காரர்கள் பயந்துபோகிறார்கள். அம்மன்கோயிலுக்கு முன் கோயில்கட்டிக் கும்பிடும் தெய்வானையை வந்து வணங்கிக் கொள்கிறார்கள். அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பும் கேட்கிறார்கள்.